Wednesday 20 September 2017

34வருடங்களாக இலவசமாகக் கல்வி போதிக்கும் மாற்றுத்திறனாளி!



34வருடங்களாக இலவசமாகக் கல்வி போதிக்கும் மாற்றுத்திறனாளி! 
மலைவாழ் குழந்தைகளின் 'ஹீரோ' மாணிக்கம்...

பிறவியிலேயே சூம்பிப்போன கால்கள், தவழ்ந்து நடக்கும் நிலையிலும், ஊனத்தைத் தூக்கி வீசிவிட்டு, கல்வி அறிவில் பின்தங்கிய பகுதியாக விளங்கும் பச்சமலை மலைவாழ் குழந்தைகளுக்கு, 34 வருடங்களாக இலவசமாக கல்விச் சேவை புரிந்துவருகிறார், மாற்றுத்திறனாளியான மாணிக்கம்.

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த பச்சமலையில் உள்ள புத்தூர்தான் இவரது சொந்த ஊர். பிறக்கும்போதே, இரண்டு கால்களும் ஊனமாக இருந்தன. நடக்க மிகவும் சிரமப்பட்டாலும், படிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன், திருச்சியில் தங்கிப் படித்த மாணிக்கத்தால், இ.எஸ்.எஸ்.எல்.சி-க்கு மேல் படிக்க முடியவில்லை. அதனால், சொந்த ஊரிலேயே தங்கியிருந்தவர், படிப்பதற்குத் தான் பட்ட கஷ்டங்களைத் தன் ஊர் குழந்தைகள் படக்கூடாது என நினைத்தார்.

தன் ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும், அப்பகுதி மக்களுக்கு போதிய கல்வி விழிப்பு உணர்வு இல்லாததாலும், படிக்க வரும் குழந்தைகள் குறைவாக இருந்தனர். தன் கிராமத்தில், தான் படித்த பள்ளியின் நிலமையை மாற்ற எண்ணிய மாணிக்கம், அந்தப் பள்ளிக்குச் சென்று, குழந்தைகளுக்குப் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

மாணிக்கத்திடம் பேசியபோது, “இப்பவே இந்தப் பகுதியில் கல்வி அறிவு குறைவாக இருக்குமென்றால், 48 வருடங்களுக்கு முன், இதைவிட மோசமாக இருந்திருக்கும். போக்குவரத்து வசதியே இல்லாத காலம். மக்களிடம் அவ்வளவாக விழிப்புஉணர்வு இல்லாததால், பலர் பள்ளிக்குப் போனதே இல்லை. அதை உணர்ந்த அரசாங்கம், 5-ம் வகுப்பு வரை உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கியது. நான், இங்குதான் 5-ம் வகுப்பு வரை படித்தேன். பிறகு, அதற்குமேல் திருச்சியில் தங்கிப் படித்தேன். குடும்பச் சூழலால் இ.எஸ்.எஸ்.எல்.சி-க்கு மேல் படிக்க முடியவில்லை. எனது அண்ணன் தங்கராசுக்கு பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை கிடைத்தது. ஓய்வாக இருக்கும் நேரங்களில், அண்ணனுடன் பள்ளிக்கூடத்துக்குப் போவேன். அப்படிப் போகும்போது, ஆசிரியர் பற்றாக்குறையால், மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதில் சிக்கல் இருப்பதை உணர்ந்தேன். நான் படித்த பள்ளிக்கும், சொந்த ஊர் குழந்தைகளுக்கும் கல்விச் சேவை செய்ய நினைத்து, விருப்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கூறினேன். அவரும் சம்மதித்தார்.

இந்தப் பகுதியில் படிப்பறிவு குறைவு என்பதால் அவ்வளவாகப் பிள்ளைகள் படிக்க வர மாட்டார்கள். பெற்றவர்களிடம் பேசி, குழந்தைகளை அழைத்துவந்து பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தோம். இந்தப் பகுதியில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இருக்கக்கூடாது என நினைத்தேன். பள்ளியில் பாடம் நடத்தியதுபோக, காலையிலும் மாலையிலும் டியூஷன் எடுக்கிறேன். லீவு விட்டாலும் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவேன். அதனால், மாணவர்கள் நம் கண்காணிப்பிலேயே இருக்கிறார்கள். தமிழ், அறிவியல் பாடங்கள் எடுக்கிறேன்.

ஆரம்பத்தில் இங்கு வேலைசெய்கிற ஆசிரியர்கள், என் செலவுக்கு 5, 10 ரூபாய் கொடுத்தாங்க. நம்ம ஊருக்குச் சேவைசெய்ய பணமெல்லாம் வேண்டாம் என மறுத்தேன். கைச்செலவுக்கு உதவும் என ஆசிரியர்கள், மாதம் 200ல் ஆரம்பித்து இப்போது 1000 ரூபாய் கொடுக்கிறார்கள். இப்படியே 34 வருடங்கள் போயிடுச்சு. இன்னும் கொஞ்ச காலம்தான். அதுவரை எங்க ஊரில் படிக்காத குழந்தைகளே இருக்கக்கூடாது என்பது என்னோட ஆசை. அதற்காக, சாகும்வரை உழைப்பேன்” என்றார் நம்பிக்கையோடு.

வணங்குறேன்அய்யா.....

No comments:

Post a Comment