Saturday 9 September 2017

ஃபேஸ்புக் மூலம் இயற்கை தோட்டக்கலை தொழில்- மாதம் லட்சங்களில் ஈட்டும் பொறியாளர்


இன்றைய காலத்தில் நம் அனைவரின் வீட்டிலும் இந்த வாசகத்தை நம் பெற்றோர்கள் சொல்லக் கேட்டு இருப்போம். ”எப்ப பார்த்தாலும் அந்த பேஸ்புக்ல, என்ன தான் செஞ்சுட்டு இருக்கியோ...” என்று.
ஆனால் அப்படிப்பட்ட முகநூலிலேயே தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக செய்து இன்று மாதம் 1.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார் பவன். இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து சாதிக்க முடியும் என்று எடுத்து காட்டியுள்ளார் பவன் ராகவேந்திரன். 21வயதை கூட தாண்டவில்லை ஆனால் இன்று வருமானம் ஈட்டும் தொழில்முனைவர்.
சென்னை கூடுவாஞ்சேரியில் குடும்பத்துடன் வாழ்த்து வருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு தோட்டக்கலை மேல் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்தேன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன்.
“ஸ்விச் போட்ட உடன் இயங்கத் துவங்கும் மிஷினைப் போல் என் வாழ்க்கையை இயக்க நான் விரும்பவில்லை. அதனால் தான் அந்த நிறுவனத்தில் சேர்ந்த முன்று மாதங்களிலேயே வெளியேறினேன், வெகு நாளாக வீட்டிலேயே என் வாழ்நாள் கழிந்தது,”
என்று தன் தொடக்கம் பற்றி பகிர்ந்தார் பவன். எனக்குள் ஒரு பயம் எற்பட்டது, வேறுவழி இல்லாததால் மீண்டும் வேறு ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து விடலாம் என்று எண்ணினேன், ஆதலால் வேலையை தேட ஆரம்பித்தேன்,” என்றார்.
இடைப்பட்ட காலத்தில் வீட்டின் வெளியே சிறு தோட்டம் அமைத்து செடி வளர்த்து வந்தேன். பெரும்பாலும் எங்கள் வீட்டிற்குத் தேவைப்படும் காய்கறிகளை நான் என் தோட்டத்திலேயே வளர்த்து அதனையே பயன்படுத்திக் கொள்வோம். அப்படி ஒரு நாள், நான் வாங்கிய செடியை நட என் வீட்டுத் தோட்டத்தில் இடம் இல்லாததால் அதனை யாருக்காவது தந்து விடலாம் என்று எண்ணினேன். அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் என தெரிந்தவர்கள் யாரும் வாங்க முன் வராததால் முகநூலில் இந்த செய்தியை பதிவிட்டேன்.
அந்த பதிவு தான் பவனின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது...
நான் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த பதிவை பார்த்து என்னை தொடர்பு கொண்டு பேசினார் கீனா புல்டன் (பவனின் முதல் கஸ்டமர்). தனது குழந்தையின் பிறந்த நாளுக்கு வரும் விருந்தினருக்கு பூச்செடிகளை ரிட்டர்ன் கிஃப்ட்டாக (return gift) தர விரும்பி உள்ளார். எனது பதிவை பார்த்து, என்னை தொடர்பு கொண்டு பேசினார். உங்களிடம் இருக்கும் செடிகளையும் சேர்த்து எனக்கு முப்பது பூச்செடிகளை வாங்கிக் கொடுங்கள், அதற்கு உரிய பணத்தை கொடுத்து விடுகிறேன் என்றார். நான் இருந்த நிலைமையில் எதையும் யோசிக்கவில்லை, உடனடியாக சரி என்று அவர்களுக்கு பதில் அளித்துவிட்டேன். இப்படித் தான் இந்த தொழிலுக்குள் நுழைந்தேன்.
அப்போது என்னிடம் இருந்த பணத்தை முதலீடு செய்து முப்பது பூச்செடிகளை வாங்கி அவர்களிடம் ஒப்படைத்தேன், அந்த வியாபாரத்தில் எனக்குக் கிடைத்த லாபம் 150 ரூபாய் மட்டும் தான்.
நம் உயிரை பறிக்கும் உயிரற்ற மிஷின்களை விட நம்மை நீண்ட நாட்களுக்கு ஆரோகியமாக வாழ வைக்கும் இயற்கை தாவரங்கள் மேல் அலாதி பிரியம் ஏற்பட்டு, இந்த தொழிலில் முழு வீச்சுடன் இறங்கியுள்ளார். வியாபாரம் என்றால் என்னவென்றே தெரியாமல் என்ன செய்யப் போகிறாய் என்று வீட்டில் அனைவரும் என்னிடம் கேள்வி எழுப்பினார், அதற்கான விடையை அவர்களுக்கு என்னால் கொடுக்க இயலவில்லை. நம்பிக்கை ஒன்றே என்னிடம் விடையாக அப்போது இருந்தது. தனது கல்லூரி நண்பர்களை இணைத்துக் கொண்டு செயல்பட துவங்கினார் பவன்.
எங்களது வியாபாரம், விளம்பரம், சந்தைப்படுத்தல் ஆகிய அனைத்தும் முகநூல் வாயிலாகவே செய்து வருகிறோம். ஃப்ரீ டோர் டெலிவரி (free door delivery) போன்ற சலுகையால் மக்களிடம் நாங்கள் எளிதில் சென்று அடைந்தோம்.
எங்கள் முன்னேற்றத்திற்கு முழுக் காரணம் எங்களிடம் வியாபாரம் செய்யும் வாடிக்கையாளர்கள் தான். நான் ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் வீட்டில் செடிகளை டெலிவரி செய்யும் போதும் அவர்கள் என்னிடம் நிறைய அறிவுரைகள் கூறுவார்கள். அதனை பின்பற்றியதாலே நான் இப்போது இருக்கும் நிலைக்குக் காரணம் என்கிறார்.
மேலும் மாடித்தோட்டம் அமைத்துத் தருவது மூலமும், கல்யாணத்திற்கு வரும் விருத்தினருக்கு ரிட்டர்ன் கிஃப்ட்டாக செடிகளை அவர்களுக்கு கொடுப்பதன் மூலமும் அவர்களுக்கு இயற்கை மீதான விழிப்புணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு புதுமையான யுத்திகளைக் கொண்டு வாடிக்கையாளர்களை ஈர்த்து பெரிய அளவிலான வியாபாரத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
சென்னையில் இந்த கிஃப்ட் முறையை முதலில் கொண்டு வந்தது பவனின் பி.கே.ஆர்.கிரீன்ஸ் நிறுவனம் தான். உடலுக்கு ஆரோக்கியான அப்பளம், இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் போன்றவற்றையும் நாங்கள் விற்று வருகிறோம். நாங்கள் இருக்கும் இடம் கிராமங்களுக்கு அருகே உள்ளதால், அங்கு இருப்பவர்கள் ஆரோக்கிய முறையில் அப்பளம் தயாரிப்பது ஆரோக்கியமான உணவுகளை, பொருட்களை தயாரித்து வந்துள்ளனர், ஆனால் அதனை அவர்கள் விற்கமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர். நானும் என் குழுவும் அவர்களை சந்தித்து அவர்கள் தயாரிப்பவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.
ரிட்டன் கிஃப்ட் பைகள்
மேலும் விதை பந்துகளை எப்படி உருவாக்குவது, விதை பந்துகளால் என்ன பயன், இயற்கை முறையில் எப்படி உரம் செய்வது போன்ற செயல்முறைகளை மாணவ மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளிக்குச் சென்று கற்றுக் கொடுத்து வருகிறோம். இதனால் அவர்களுக்கு இயற்கை முறை விவசாயம் மேல் ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன்.
”அன்று என் குடும்பத்தினர் வியாபாரம் பற்றி ஒன்றும் தெரியால் எப்படி சாதிக்கப் போகிறாய் என்று கேட்டனர், ஆனால் இன்று அடுத்த படியாக எப்படி இந்த தொழிலை உயர்ந்தப் போகிறாய் என்று கேட்கிறனார். சுய தொழில் செய்ய வியாபார யுத்தி தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. புதுமையும், தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தால் போதும்,” 
என்கிறார் பவன் ராகவேந்திரன். இளைஞர்கள் நினைத்தால் எதுவும் சாதிக்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இவருக்கு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment